Related posts

Breaking News

8 Years of Sivakarthikeyan - பட்ட கஷ்டங்களும் செய்த சாதனைகளும்


சிவகார்த்திகேயன் அவர்கள் தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்து கிட்டதட்ட 8 வருடங்கள் கடந்துவிட்டன. இருந்தாலும் கூட இன்னமும் அதே துறுதுறுப்பு + அடக்கம் என நாம் சின்னத்திரையில் பார்த்த அதே சிவாவாகதான் பெரிய திரையிலும் இருக்கிறார். இப்போது உச்ச நட்சத்திரமாக இருந்தாலும், அந்த இலக்கை அடைய அவர் பட்ட கஷ்டங்கள் ஏராளம். சிவகார்த்திகேயன் அவர்கள் கடந்து வந்த பாதையை மீட்டு பார்ப்பதன் ஊடாக, வளரும் இளம் தலைமுறையினருக்கு தன்னம்பிக்கையை வளரச்செய்வதே இக்கட்டுரையின் எழுதப்படுவதன் நோக்கம். 

சிவா இயல்பாகவே மிமிக்ரி மற்றும் ஸ்டான்ட் அப் காமடியில் ஆர்வம் கொண்டவர். இவர் ஸ்டார் விஜய் நடாத்திய கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி வெற்றிவாகை சூடி, அதே சேனலில் தொகுப்பாளராக இருந்தார். இவர் எந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரோ அவையெல்லாம், சிவாவின் ஆங்கரிங் ஸ்டைலுக்காகவே ஹிட்டடித்தன. உதாரணத்திற்கு ஸ்டார் விஜய்யில் வந்த ஜோடி நிகழ்ச்சியை சொல்லலாம். அதில் சிவாவை மட்டும் பார்த்து ரசித்த பார்வையாளர்கள், போட்டியாளர்கள் நடனமாடும் போது சேனலை மாற்றி விடுவார்கள். சீரியஸ் மோடில் இருந்த நிகழ்ச்சிகளையெல்லாம் காமெடியாக மாற்றினார் சிவா. இது பார்வையாளர்களுக்கு பார்க்க நகைச்சுவையாகவும் சிம்பிளாகவும் இருந்தாலும், இதற்காக இவர் செய்த ஹார்ட் வேர்க்குகள் பல. நாய் வேடம் குரங்கு வேடம் என எல்லாம் போட்டு, எத்தனையோ சிறப்பு விருந்தினர்கள் இவரை இகழும் வண்ணம் கதைத்தாலும் அதையெல்லாம் முகத்தில் ஒரு புன்னகையோடு தாங்கிக் கொண்டு மேலும் மேலும் சென்றார் சிவா. 

அதே நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் சிவாவை வெறுப்போடு ஏதும் சொல்லி வம்புக்கு இழுத்தால் கூட கூட தனது டைமிங் கவுண்டர்களால் அவற்றை கடந்தார் சிவா. இருப்பினும் Boys vs Girls நிகழ்ச்சியில், எதிரணி சிவாவை சீண்டிய போது, அதற்கான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டிய இடத்தில் சரியாக செய்திருந்தார் சிவா. இருந்தாலும் அவரை அன்று கிட்டதட்ட அழ வைத்துவிட்டனர் சுற்றி இருந்தவர்கள். உண்மையில், அன்று அரங்கத்தில் சிவாவை எதிர்த்த யாருமே இன்று யார் நினைவிலும் இல்லை. ஆக சரியான கருத்தை சரியான இடத்தில் கண்டிப்பாக பதிவு செய்யத்தான் வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

சிவா தொகுப்பாளராக, பீக்கில் இருந்த காலகட்டத்தில் இவர் எந்த நாட்டிற்கு எந்த ஷோக்கு சென்றாலும், சிவா ஷோவை முடிக்கும் வரை மக்களை தன் பேச்சால் கட்டிப்போட்டு விடுவார். அத்தனை குறும்பும் வசீகரமும் இவரது பேச்சில் இருக்கும். இவர் சினிமாவுக்கு வர முக்கிய காரணம், இயக்குனர் பாண்டியராஜ்தான். மெரினாவில் ஒரு சிம்பிளான ஹீரோவாக இவர் நடித்த போதே, “இவன்லாம் ஹீரோவாகி என்ன செய்ய போறான்” என்றுதான் அன்றைய சக நட்சத்திரங்கள் கூறினர். அதில் பலர் இன்று இன்னஸ்ட்ரீயில் இல்லை. காரணம் சிவாவை நகைப்பதில் காட்டிய அக்கறையை அவர்கள் தங்களுடைய தொழிலில் காட்டத் தவறிவிட்டனர். அதேவேளை, நடிகர் தனுஷும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றினார் என்றால் அது பொய்யில்லை. காரணம், சிவாவுக்கு முதலில் வாய்ப்பு கிடைத்ததே தனுஷின் 3 படத்தில்தான். 3 படத்தில் சிவா மற்றும் தனுஷ் வரும் காட்சிகள் இன்றும் யூட்டியுப்பில் பிரபலம். ஆகவே, நாம் மற்றவர்களின் ஏளனங்களை பொருட்படுத்தாது, நமது வளர்ச்சிக் பாதையில் அக்கறை செலுத்தினால், நாம் நம்மை கேலி செய்தவர்களை சிம்பிளாக ஓவர் டேக் செய்யலாம் என அறிந்து கொள்ளலாம்.

மேலும், மெரினா, மூணு, மனம் கொத்திப்பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா என சுமாராக சென்றுக் கொண்டிருந்த சிவாவின் பாதையில், பெரிய கமர்ஷியல் சக்ஸஸ் என்றால் அது தனுஷ் தயாரித்த எதிர் நீச்சல் திரைப்படம்தான். தனுஷ், அப்போது பெரிய புகழுச்சியில் இல்லாத சிவாவை நம்பி அவ்வளவு பெரிய முதலீடு செய்ததை இன்று நினைத்தாலும் வியப்பாக உள்ளது. ஆக, உங்களை பயன்படுத்தும் கூட்டத்தில் இருந்து விலகி, உங்களை நம்பி ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கும் ஒரு கூட்டத்தை சம்பாரியுங்கள். கண்டிப்பாக நாளை நீங்கள் வெற்றி பெற அவர்கள் ஏணியாக இருப்பார்கள். அத்தோடு, தனுஷுக்கும் சிவாவுக்கும் இடையில் சில முரண்பாடுகள் இப்போது உள்ள போதும், சிவா என்றுமே அவருக்கு நன்றி சொல்ல தயங்குவதில்லை. ஆகவே, உங்களை வளர்த்துவிட்டவர்களை எந்த நிலையிலும் மறக்காதீர்கள் என்பதையும் ஞாபகம் வையுங்கள்.



இது போன்ற பழக்கங்கள்தான், ஒரு கட்டத்தில் சிவா தான் ஆங்கராக இருந்து தொகுத்த அதே அவார்ட் நிகழ்ச்சியில், அவரே அவார்ட் வாங்கும் காரணமாக இருந்தன. அன்று அரங்கமே எழுந்து நின்று சிவாவுக்காக கைத்தட்டியது இன்றும் மறக்க முடியாதது.  எதிர் நீச்சலின் பின் சிவா கிடுகிடுவென வளர்ந்தாலும், இவரது படங்களுக்கு பலரும் பிரச்சினை கொடுத்தனர். இப்படி இவரின் ரஜினி முருகன் படம், தயாரிப்பு சைடில் இருந்த பிரச்சினைகளால் பல காலமாக ரிலீஸ் ஆகாததால் ரிலீஸ் தேதி இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டேயிருந்தது. இருப்பினும், பல சிக்கல்களின் பின் அது ரிலீஸாகி மக்களிடையே பெறும் வரவேற்பு பெற்றது. இதேபோல்தான், நீங்கள் திறமையானவராக இருப்பின், உங்கள் படைப்பு திறமையானதாக இருப்பின் அது லேட்டாக வெளியே தெரிந்தாலும் அதை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என அறிக. 

சிவா பெரிய நடிகரான பின், சீமராஜா , லோக்கல் என பெரிய சறுக்கல்கள் வராமலும் இல்லை. சிவாவை பாராட்டிய அதே வாய்கள், இந்த படங்கள் தோற்ற போது சிவாவை பெர்சனலாகக் கூட தாக்கினர். ஆகவே, வெற்றி என்பது நிலையில்லை என்பது இங்கே உங்களுக்கு புலப்படலாம். பின்னர் தன்னை அறிமுகப்படுத்திய அதே பாண்டிராஜின் நம்ம வீட்டுப்பிள்ளை மூலம் மெகா ஹிட் கொடுத்தார் சிவா. இதன் மூலம் தோல்வியும் நிரந்தரமில்லை என்பதை அறிக. இப்போது ஹீரோ படம் சிவாவுக்கு பெரிதாக கைக்கொடுக்காத போதும், அடுத்தடுத்த படங்களில் மீண்டும் எழுந்து நிற்பார் என்பது உறுதி. 



ஏன் இப்போது கூட ரவி குமார் இயக்கத்தில் சிவா நடிக்கவிருந்த படம் நிதி ரீதியான பிரச்சினைகளால் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் இப்போது, படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. So, நீங்கள் வளர வளர உங்களைச் சுற்றியுள்ள பிரச்சினைகளும் பூதாகரமாக வளரலாம். ஆனால் எந்த நிலையிலும் துவண்டு விழுந்து விடாமல் ஓடிக் கொண்டேயிருங்கள். ஏனெனில், நாம் தொடர்ந்து ஓடிக் கொண்டிருப்பதே பலருக்கு விருப்பமில்லாத ஒன்றுதான். ஆகையினால், விழுந்தாலும் கூட எழுந்து இன்னும் வேகமாக ஓடுங்கள். அப்போதுதான் மெரினாவில் பத்தோடு பதினைந்தாக இருந்த நீங்கள் நம்ம வீட்டுப்பிள்ளையாக மாற முடியும். 


No comments

//]]>