Copycat Movies - மெர்சல் (Part 1)
தமிழ் சினிமாவில், இன்று நேற்றல்ல எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் முதலே வேற்று மொழி திரைப்படங்கள் தமிழில் நகலெடுக்கப்பட்டுக் கொண்டுதான் இருகின்றன. ஏன், வேற்று மொழி படங்கள் மட்டுமல்லாமல் பழைய தமிழ் படங்களையே பட்டி டிங்கரிங் பார்த்து புதிதாக வெளியிடுகின்றனர். இதில் விதிவிலக்காக ஒரு சில தயாரிப்பு நிறுவனங்கள் முறைப்படி திரைப்பட மீளுருவாக்க உரிமையை பெற்று, படங்களை தங்களுக்கு தேவையான மொழியில் வெளியிடுகிறது. இப்படி செய்வதனால் உரிய கலைஞர்களுக்கு அங்கீகாரம் கிடைகிறது. அவர்களுக்கு உரித்தான பணமும் சென்றடைகிறது. மேலும் உரிய ரீமேக் உரிமைகள் பெற்று ஒரு படத்தை ரீமேக் செய்வதால், ஒரு நல்ல படைப்பு நேர்மையான முறையில் மக்களுக்கு சென்று சேர்கிறது.
இன்னும் சிலர், தங்கள் படைப்பிற்கான மூலப் படத்தை வெளிப்படையாக சொல்லி, காப்பியடிக்காமல் எப்படி அதன் தாக்கத்தில் படம் எடுத்தார்கள் என்பதையும் சொல்கிறார்கள். இங்கேதான் ஒரு சின்ன சிக்கல் எழுகிறது. தாக்கம் ( Inspiration) என்றால் என்ன? நகல்/ காப்பி (copy ) என்றால் என்ன? என்னும் கேள்விகளே அவை. விரிவாகப் பார்ப்போம்.
முதலில் தாக்கம் அல்லது ஒத்த கதைக்கரு கொண்ட படங்களை பார்ப்போம். உதாரணத்திற்கு, அபூர்வ சகோதரர்கள் மற்றும் மூன்று முகம், இந்த இரண்டு படங்களுமே ஒரே கதைதான். தந்தையை கொன்ற எதிரிகளை பழி வாங்கும் மகன்கள் என சிம்பிளாக சொல்லலாம். ஏன் பாகுபலி கூட இதே கதைகருதான், ஆனால். இரண்டிற்கு பதில் ஒரே ஒரு மகன். இது போன்ற கதைகளுக்கு முன்னோடி The Lion King திரைப்படம்தான் ( லயன் கிங், ஷேக்ஸ்பியரின் Hamletன் தாக்கம் என்பது தனிக்கதை).
மூன்று முகம் 1982ல் வெளியாகி 250 நாட்களை கடந்து ஓடியது. 1989ல் வெளிவந்த அபூர்வ சகோதரர்கள்தான் அன்றைய கால கட்டத்தில் அதிக வசூல் செய்த படம். ஆனால் மூன்று முகத்தை பார்த்துதான் அபூர்வ சகோதரர்களை நகலெடுத்தார்கள் என திரைத்துரையினரும் சரி, ரசிகர்களும் சரி, அன்றும் இன்றும் சொல்வதில்லை. காரணம் அது நகலல்ல. யோசித்து பாருங்கள், அபூர்வ சகோஸ் படம் எப்படி வித்தியாசப்படுகிறது என, ஆம் அதன் வித்தியாசமான திரைக்கதை. அப்பு கமல்தான் கதையின் Protagonist அதாவது கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரம்.
தான் குள்ளமாக இருப்பதனால்தான் தன்னை யாரும் மதிப்பதில்லை தான் காதலித்த பெண்ணும், ஏன் தனது சொந்த அம்மாவே தன்னை ஏளனமாக பார்க்கிறார்கள் என வேதனைப் படும் அப்பு கமல் தற்கொலைக்கு முயல்கிறான். அவனைக் காப்பாற்றும் அவனது அம்மா, அவனது பிறப்பின் ரகசியத்தை கூறுகிறார்கள். அவனது தந்தையை கொன்றது மட்டுமல்லாமல், தாயக்கு விஷத்தை கொடுத்து, அதன் எதிர் வினையாகதான் தான் குள்ளமாக பிறந்தோம் என அறிந்து கொள்கிறான். தன்னை இப்படியக்கியவர்களை பழி வாங்க கொலைகளை செய்கிறான், ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அப்பு செய்யும் கொலைகளுக்கு அவனது சகோதரனான மெக்கானிக் கமல் சிக்கிக்கொண்டே இருக்கிறான். இதில் அப்பு கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதம், அதன் காதல் தோல்வி/ ஏக்கம் ஆகியவை சொல்லப்பட்ட விதம், அங்கே வரும் இளையராஜாவின் இசை என்பன சிறப்பம்சங்கள்.
சரி, நாம் மெர்சலுக்கு வருவோம். மெர்சலில் இது போன்ற ஒழுங்கான தனித்துவமான கதையொன்று இருக்காது. படம் ஒழுங்கின்றி அலைபாயும். அ.சகோ போல மெர்சலிலும் ஒருவர் செய்த கொலைக்கு இன்னொருவர் சிக்குவார். அதேபோல அங்கு சர்கஸ் வித்தை, இங்கு மேஜிக் வித்தை. மீதிக்கதை மூன்று முகத்தினுடைது (flashback மட்டும் சற்று வித்தியாசம்). மெர்சல் படம் வெளியான பின், அது மூன்று முக திரைப்பட காப்பி என திரைப்பட சங்கத்தில் பெரிய பிரச்சனை எழுந்தது. மற்ற பக்கம், அ. சகோ பட உரிமை Raj Kamal F.I என்ற கமலின் நிறுவனத்திடம் இருந்தது. கமல் மய்யத்தில் இருந்ததால் இதைப் பெரிதாக எடுக்க வில்லை. இங்கே கமலுக்கு ஒரு தொகை பணம் வந்திருந்தால் கூட அது பெரியதாக அவருக்கு இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், மூன்று முகம் படத்தின் உரிமையை வைத்திருக்கும் பழைய மற்றும் சிறிய முயற்சியாளருக்கு அந்த தொகை கண்டிப்பாக பெரியதுதான்.
ஆனால் இவை மட்டுமல்ல மெர்சலின் பிரச்சினைகள், மெர்சலின் காட்சிகளும் கூட பல படங்களில் இருந்து அடித்த அப்பட்ட காபி+பேஸ்ட் சீன்களே. இவற்றுள் பல நான் பார்த்த ஹாலிவுட் திரைப்பட காட்சிகளின் நகலே. இதனால் மெர்சல் பார்க்கும் போது கடுப்பாக இருந்தது. அந்த கடுப்புதான் காப்பியடிப்பதில் உள்ள மிகப் பெரிய சிக்கல். அதாவது பார்வையாளனை முட்டாளாக நினைப்பது. இவற்றை பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
தொடரும்...(கட்டுரையின் நீளம் அதிகம் என்பதால் இருபாகங்களாக பிரசுரிக்க இருக்கிறேன்)
Mission Impossible |
Mersal |
அடுத்தது எப்போ??
ReplyDeleteஇந்த வாரத்திற்குள்...
Delete